செவ்வாய், ஜூலை 19, 2011

அதிர்ச்சி

உலகெங்கிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை நிமிடத்திற்கு நிமிடம் துல்லியமாக கொண்டுவரும் ஊடகங்கள் நிறைந்த இன்றைய உலகிலும் நாம் சிந்தையை எட்டாத பல உண்மைகள் மறைக்கப்படும்போது அது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட செயலா என்பது புரியாமல் தவிக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு உண்மை இன்றைய தேடலில் கிடைத்தது.
பிச்சைக்காரர்களே இல்லாதது அந்த நாடு.இங்கு முழுமையான ஒரு ரொட்டியின் விலை 0.15 (அமெரிக்க) செண்ட் மட்டுமே - இந்திய நாணய மதிப்பில் 68 பைசா.இல்லம் இல்லாத குடும்பமோ, தனி மனிதரோ ஒருவரும் இல்லை.வங்கிகளில் கடன் பெற்றால் அதற்கு வட்டி இல்லை. கடனை திரும்பச் செலுத்த குறுகிய கால வரையறையும் இல்லை.இந்நாட்டினர் திருமணம் செய்துகொண்டால் அரசு அளிக்கும் பரிசு 50,000 டாலர்கள் + வாழ வீடு.எந்த தொழில் கல்வி படிக்கின்றனரோ அதற்குரிய ஊதியம் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.வேலை கிடைக்கவில்லையா, வேலை கிடைக்கும் வரை மாதா மாதம் ஊதியம் அளிக்கப்படும்.அயல் நாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டியது அவசியமா? உங்களு 2,500 யூரோ செலவிற்கும், வாழ்விடம் + கார் வாங்கிக் கொள்ளவும் பணமளிக்கப்படும்.இந்த நாட்டில்தான் கார்கள் தயாரிப்பு விலைக்கே உங்களுக்கு விற்கப்படும். வரி, கிரி என்று ஏதுமில்லை. இந்த நாடு உலக நிதி அமைப்புகள் எதனிடமிருந்தும் கடன் பெற்றிருக்கவில்லை. செலுத்த வேண்டிய கடன் என்று ஒரு பைசாவும் இல்லை. ஆனால் உலகின் வளர்ந்த பல நாடுகளின் வங்கிகளில் பல நூறு பில்லியன்களில் பணத்தைப் போட்டு வைத்துள்ளது. தரமான கல்வி எல்லோருக்கும் இலவசம், மருத்துவ வசதியும் இலவசம்.வியப்பாக உள்ளதா? இந்த நாட்டின் பொருளாதார புள்ளி விவரங்களையெல்லாம் (அதிகாரப்பூர்வமானவை) எடுத்து அலசினால் தலை சுற்றுகிறது. தங்கம் இருப்பு 144 டன்கள். ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாய் 45 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) வருவாய் மீதான செலவு 38 பில்லியன் டாலர்கள் மட்டுமே. உபரி பட்ஜெட் வைத்துள்ள உலகின் ஒரே நாடு. மக்கள் தொகை மிகவும் குறைவு. வெறும் 65 இலட்சம்தான். அயல் நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் நாடு. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்று அறியப்படாதது, ஆனால் மக்களின் தனி நபர் சராசரி ஆண்டு வருவாய் 13,800 டாலர்கள்! உலக வறுமைக் கோட்டுப் பட்டியலில் இந்நாடு 102ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 82வது இடத்தில் உள்ளது. அதாவது பணக்கார நாடான அமெரிக்கா, இந்நாட்டோடு ஒப்பிடுகையில் வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ள நாடு. இந்த வறுமைக் கோட்டுப் பட்டியலில் இந்தியா 52வது இடத்தில் ‘முன்னணி’யில் உள்ளது! பக்கத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தான். தெரிந்துகொள்வோம்... இந்த நாட்டின் பெயர் லிபியா!சுதந்திரம் (இண்டிபென்டண்ட்) என்ற சொல்லிற்கு சுயச் சார்பு என்ற பொருளானால் அது 100 விழுக்காடு பெற்றுள்ள கடன் சுமையற்ற, தன் காலில் நிலையாக, இன்று நேற்றல்ல, 40 ஆண்டுகளாக காயமற்று, நொண்டாமல் நலமாக இருந்து வந்துள்ளது லிபியா!இதன் அதிபராக இருந்துவரும் கர்னல் முவாம்மர் கடாஃபி பதவியை விட்டு இறங்கவேண்டும் என்று கோரி அந்நாட்டில் நடைபெற்றுவரும் ‘ஜனநாயக எழுச்சி’தான் செய்தியாக இதுநாள் வரை வந்துள்ளது. ஆனால் அந்நாட்டின் உள்நாட்டு நிலை இதுதான் என்பது இப்போதுதான் ஊடகங்களில் வரத் தொடங்கியுள்ளது! உலகின் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு அல்ல லிபியா. அது 18வது இடத்தில் உள்ளது, உலகின் மொத்த கச்சா உற்பத்தியில் 2% மட்டுமே லிபியாவின் பங்கு. அது நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1.8 மில்லியன் பீப்பாய் கச்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. ஆனால் மற்ற நாட்டு கச்சாவை விட லிபியாவின் கச்சா தரமானது என்பதால் ஐரோப்பிய சந்தையில் அதற்கு வரவேற்பும் அதிகம், விலையும் அதிகம்.எனவே கச்சா ஏற்றுமதியின் மூலம் அதற்கு கிடைக்கும் வருவாயை அது மிகத் தாராளமாக தன் மக்களுக்கு வாரியிறைத்துள்ளது. இதன் நிரூப்பிக்கக் கூடியதாக இருக்கிறது ஐ.நா.வின் புள்ளி விவரங்கள். ஆப்ரிக்க நாடுகளிலேயே லிபியாதான் மனித வள மேம்பாட்டு குறியீட்டில் முதல் நிலையில் உள்ளது. சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள். லிபியாவில் அளிக்கப்படும் கல்வியும், மருத்துவ வசதிகளும் மிகத் தரமானவை. தனது நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கச்சா உற்பத்தியை அதிகப்படுத்துவது (நாளுக்கு 3 மில்லியன் பீப்பாயாக உற்பத்தியை அதிகரிப்பது) உட்பட பல முன்னேற்றத் திட்டங்களுக்காக எகிப்து, டுனிசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் திறன் பணியாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு அளித்துள்ளது. உலகின் பெரு நிறுவனங்கள் பலவற்றிற்கு திட்டங்களை முழுமையாகக் கையாளும் சட்ட ரீதியான சுதந்திரத்தை தந்துள்ளது.
FILE
லிபியா எனும் நாடு பற்றி மேற்கூறப்பட்ட விவரங்கள் யாவும் சுதந்திரமான பன்னாட்டு ஆய்வுகளின் புள்ளி விவரங்கள் என்பதை கருத்தில்கொள்க. கர்னல் கடாஃபி அந்நாட்டின் அதிபராக பல பத்தாண்டுகளாக நீடிக்கிறார் என்பதைத் தவிர, அங்கு அரச ஒடுக்குமுறை இருந்ததாக கடந்த மார்ச் மாதம் வரை செய்திகள் கூட ஏதுமில்லை. பிறகு திடீரென ‘ஜனநாயக எழுச்சி’ வெடித்ததன் பின்னணி?
தங்களுடைய எந்தக் கட்டுப்பாட்டிற்கும் உட்படாத நாடாக லிபியா நீடிக்கிறதே என்கிற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட நேச நாட்டு அமைப்பிற்கு (நேட்டோ) இருந்த கோவம், மற்ற பல அரேபிய நாடுகளில் உருவான உண்மையான ஜனநாயக எழுச்சியை காரணமாகக் காட்டி ‘ஐந்தாம் படை’களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த ‘ஜனநாயக எழுச்சி’ என்கின்றனர்.

அமைதியின் உறைவிடமாக இருந்தாலும், அந்த நாடு தனக்கு வசதியான நாடாக இல்லாவிட்டால், அங்கு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தி வசதியான மாற்று அரசை ஏற்படுத்துவதுதானே உலகின் வலிமையான ஜனநாயக நாட்டின் பணி! அதைத்தான் லிபியாவில் நேட்டோக்கள் செய்கின்றன.

நேட்டோ அமைப்பு நாடுகள் கூறுவதுபோல் அங்கு மனித உரிமை மீறல்கள் இருந்ததா? “தனக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதில் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டாலும், லிபியாவில் மனித உரிமை நிலை ஒளிமயமாக உள்ளதென்பதை ஐ.நா. மனித உரிமை அலுவலர் ஒப்புக்கொள்கிறார். கல்வியை மேம்படுத்துவதிலும், மனித உரிமைக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை அளிக்கிறது லிபியா” என்று ஐ.நா.மனித உரிமை ஆணைய அறிக்கை கூறியுள்ளது.

இன்றைய உலகில் எந்த ஒரு நாட்டு அரசும் தனக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனநாயக வழியிலோ அல்லது மென்மையான முறையிலோ நடத்துவதில்லை என்பதை இந்தியாவில் இருந்து பிரான்ஸ் வரை தெளிவாகவே பார்க்க முடிகிறது. பிறகு லிபியாவிற்கு மட்டும் என்ன வேறு அளவுகோல்?

லிபியாவிற்கு எதிரான நேட்டோவின் இந்த ‘படையெடுப்பு’ ஒரு முன் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதை அமெரிக்காவின் ‘நேஷனர் ஜோர்ன’லில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று எட்மண்ட் எல் ஆண்ட்ரூஸ், கிளிப்ஃபோர்ட் மார்க்ஸ் ஆகியோர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இருந்து புரிந்துகொள்ளலாம். “உலகின் ஒட்டுமொத்த கச்சா உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2% மட்டுமே. லிபியா ஒரு தொடர்ந்த உள்நாட்டுக் குழப்பத்தில் (Prolonged Chaos) மூழ்கினாலும், அந்த உற்பத்தி இழப்பை செளதி அரேபியாவின் கூடுதல் உற்பத்தித் திறன் மூலம் ஈடுகட்டிவிடலாம்” என்கின்றனர். அதுமட்டுமல்ல, மற்றொரு கட்டுரையையும் கவனிக்க வேண்டும்.

“லிபியாவின் மைய வங்கி (நமது ஆர்பிஐ போன்றது) 100 விழுக்காடு அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை இதுவரை எந்த அரசியல் பண்டிதரும் குறிப்பிடவில்லை. இப்போது அந்நாட்டு மைய வங்கி தனது நாட்டிற்கென தனித்த நாணயத்தை (லிபிய தினார்) உருவாக்கியுள்ளது. தனது பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவல்ல ஒரு வளமிக்க, இறையாண்மையுடைய நாடாக லிபியா உள்ளது என்பதை சிலர் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதுதான் உலக வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி அமைப்புகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. அவர்கள் லிபியாவின் மைய வங்கியின் வழியாகவே, அதுவும் லிபியாவின் நாணயத்தின் வாயிலாகவே வாணிகம் செய்ய வேண்டும். அதன் (லிபியா மைய வங்கி மீது) எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இதனால்தான் ஒபாமாவின் உரையில் லிபிய மைய வங்கியை பின்வாங்கச் செய்யும் திட்டம் சேர்க்கப்படவில்லை. என்றாலும், தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப செயல்படும் நாடுகளில் (subservient countries) ஒன்றாக லிபியாவை கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் (ஒபாமா, சர்கோஜி, கேமரூன்) உலகளாவிய திட்டப் பட்டியலில் உள்ளது” என்று பேட்ரிக் ஹெம்மிங்சன் என்பவர் ‘மார்கட் ஒராகிள்’ எனும் இதழில் மார்ச் 28ஆம் தேதி எழுதியுள்ளார்.

இன்றைக்கு லிபியாவின் மீது தாக்குதல் நடத்திவரும் நேட்டோ நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் லிபியா நாடு போட்டு வைத்துள்ள பல நூறு பில்லியன் டாலர்கள் கொண்ட கணக்குகளை முடக்கியுள்ளன. இதனால் லிபியாவில் நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த கச்சா உற்பத்தி 75% சரிந்து வெறும் 75,000 பேரல்கள் அளவிற்கு குறைந்துள்ளது.
லிபிய அதிபர் கர்னல் கடாஃபிக்கு எதிராக போராடும் ‘ஜனநாயகவாதி’களுக்கு மாதச் செலவாக 100 மில்லியன் டாலர்களை (அவர்கள் ஒரு பில்லியன் கேட்கின்றனர்) வாரி வழங்குவதுமின்றி, அவர்களைக் கொண்டு பென்காசி எனும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரில் (இப்போது அந்நகரம் போராட்டக்காரர்களின்- அதாவது நேச நாட்டு அமைப்பின் ஐந்தாம் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது) புதிய வங்கி ஒன்றைத் தொடங்கி நாட்டின் லிபியாவின் பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்க முற்பட்டுள்ளார்கள்.இதுதான் லிபியாவிற்கு எதிரான நேட்டோவின் மனிதாபிமான நடவடிக்கை! ஆனால் உலகம் லிபியாவிலும் ஜனநாயக எழுச்சி ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கொண்டிருக்கிறது!